லாகூரில் 2 சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் உள்ள 2 தேவாலயங்களில் இன்று குண்டுகள் வெடித்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள யூஹானாபாத் பகுதியில் இருக்கும் 2 தேவாலயங்களின் வாசல்களில் இன்று காலை குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர், 40 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கிளையான ஜமாத்துல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இது தற்கொலைப்படை தாக்குதல் என்றனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர் என்று சந்தேகித்த இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை சேதப்படுத்தியும், கடைகளை சூறையாடியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமூகத்தை குறி வைத்து அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள், பள்ளி ஊழியர்கள் என மொத்தம் 145 பேர் பலியாகினர்.