வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்தது... அமெரிக்க இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடம்!
வெட்டித் துண்டாக்கப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் படுகாயமடைந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த இவர், விஷப்பாம்பு ஒன்றைக் கண்டுள்ளார். பயத்தில் அலறிய ஜெனீபரின் சத்தம் கேட்டு, ஓடி வந்த அவரது கணவர், அப்பாம்பை அடித்தார். இதில் அப்பாம்பின் தலை துண்டானது.
பின்னர் பாம்பின் உடலையும், அதன் தலையையும் புதைப்பதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வெட்டப்பட்ட பாம்பின் தலை, அவரைக் கடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் விஷம் பரவியது. உடனடியாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரைக் கடித்த பாம்பு ரேட்டில் சினேக் எனப்படும் வகையைச் சேர்ந்தது. அது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என்பதால், ஜெனீபரின் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.