எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு....சிறை உடைத்து தப்பிய வழக்கில் அதிரடி தீர்ப்பு
கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, சிறையை உடைத்து தப்பிய வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோர்சி மீண்டும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வந்தன. போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில், நிலைமையை 48 மணி நேரத்திற்குள் சமாளிக்க வேண்டும் என அரசுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், ராணுவம் விதித்த கெடு முடிந்ததையடுத்து பீரங்கி உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டன. இதைத் தொடர்ந்து மோர்சி தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் சிறையில் கொல்லப்பட்ட வழக்கில் மோர்சிக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களிலேயே அவர் சிறையை உடைத்து தப்பி விட்டார்.
சிறை உடைத்து தப்பிய இந்த வழக்கில் தான் தற்போது கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.