பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு.. பலியானோர் எண்ணிக்கை 133ஆக அதிகரிப்பு!
பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அந்த நாட்டில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.
தேர்தல் பிரச்சார கூட்டம்
இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பானு மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
முதல் குண்டுவெடிப்பு
அப்போது கூட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவிலிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
கட்சி தலைவர் பலி
இந்த குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் கொல்லப்பட்டனர்.
பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அதிகரிக்கும்
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.