மொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானுத்தினுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம்: ஆஸி.
பெர்த்: மொசாம்பிக்கில் கிடைத்த 2 பாகங்கள் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆண்டுக்கணக்கில் ஆஸ்திரேலியா தலைமையிலான குழு தேடியும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய 2 விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவை ஆய்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான விமானம் போயிங் 777 ரகத்தை சேர்ந்தது என்பதால் விமான பாகங்கள் ஆய்வில் ஆஸ்திரேலியா, மலேசியா நிபுணர்களுடன் போயிங் நிறுவன நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலிய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே அகழ்வாராய்ச்சி நிபுணரான நீல்ஸ் க்ரூகர் என்பவர் தென்னாப்பிரிக்காவின் மொஸ்ஸல் பே நகர் அருகில் உள்ள கடற்கரையோரம் கிடந்த விமான பாகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அது விமானத்தின் என்ஜின் பாகம் ஆகும். அதை அவரிடம் இருந்து வாங்கி வர குழு ஒன்றை தென்னாப்பிரிக்காவுக்கு மலேசியா அனுப்ப உள்ளது.