மார்ச்சில் கிடைத்த பாகங்கள் கிட்டத்தட்ட மாயமான மலேசிய விமானத்தினுடையது: மலேசியா
கோலாலம்பூர்: மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் கிட்டத்தட்ட மாயமான மலேசிய விமானத்தினுடையது என மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி கிளம்பியது. ஆனால் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் மாயமானது.
விமானம் தெற்கு இந்திய பெருடங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகக் கூறி அங்கு ஆண்டுக்கணக்கில் விமான பாகங்களை தேடி வருகிறார்கள்.
5 பாகங்கள்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரீயூனியன் தீவில் விமானத்தின் இறக்கை ஒன்று கிடைத்தது. அதன் பிறகு டிசம்பர் மாதம் மொசாம்பிக்கில் விமானத்தின் வால் பகுதி
கிடைத்தது. பிப்ரவரி மாதம் மீண்டும் மொசாம்பிக்கில் விமான பாகம் ஒன்று கிடைத்தது. மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் லோகோவுடன் கூடிய ஒரு
பாகம் கிடைத்தது. அதன் பிறகு அதே மாதம் மொரீஷியஸில் விமான பாகம் ஒன்று கிடைத்தது.
ஆய்வு
ஆங்காங்கே கிடைத்த விமான பாகங்கள் அனைத்தும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலியா, மலேசியா அதிகாரிகள் மற்றும் விமான நிபுணர்கள் அந்த பாகங்களை ஆய்வு செய்துள்ளனர்.
எம்.ஹெச். 370
கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸில் கிடைத்த பாகங்கள் கிட்டத்தட்ட மாயமான மலேசிய விமானத்தினுடையது தான் என்று மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போயிங் 777
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்த ஒரே போயிங் 777 ரக விமானம் மாயமான மலேசிய விமானம் தான். தற்போது கிடைத்துள்ள பாகங்களும் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.