ரீயூனியன் தீவில் 2வது முறையாக கரை ஒதுங்கிய விமான பாகம்: மலேசிய விமானமா?
பாரீஸ்: பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவில் இரண்டாவது முறையாக கிடைத்துள்ள விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது.
இந்திய பெருங்கடலில் ஆண்டுக் கணக்கில் தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
தீவு
இந்திய பெருங்கடலில் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கடந்த வாரம் கரை ஒதுங்கியுள்ளது. அதை ஜானி பெக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று மலேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்பும் கூட
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ரீயூனியன் தீவில் விமானத்தின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியதை இதே ஜானி பெக் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
மொசாம்பிக்
இந்திய பெருங்கடலோரம் அமைந்துள்ள மொசாம்பிக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அது மாயமான மலேசிய விமானத்தை போன்றே போயிங் 777 ரக விமானத்தினுடையது.
இரண்டு ஆண்டுகள்
மலேசிய விமானம் மாயமாகி நாளையுடன் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றது. அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமானம் குறித்து உறுதியாக எந்த தகவலும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.