66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் பாகங்கள் மீட்பு
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்த எகிப்து ஏர் விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் கிடைத்துள்ளதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்ற எகிப்து ஏர் நிறுவன விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மெடிடெரேனியன் கடல் பகுதியில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமான பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் விமான பாகம் மற்றும் பயணிகளின் உடமைகள் கிடைத்துள்ளதாக எகிப்து ராணுவம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை கிரீஸ் இன்னும் உறுதி செய்யவில்லை.
முன்னதாக நேற்று இரவும் விமான பாகங்கள் கிடைத்ததாக செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்திகள் உண்மை இல்லை என எகிப்து ஏர் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்தது.
விமானத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.