ஆஹா.. இதுவல்லவோ போட்டி.. நம்ம ஊர்லயும் இப்படி வச்சா நல்லாதான் இருக்கும்!
மனைவியை கணவன் சுமந்து ஓடும் வினோத போட்டி நடைபெற்றது.
Recommended Video
கலிபோர்னியா: சுகமான சுமை என்று சொல்வோமே... அதைத்தான் அமெரிக்காவில் ஒரு போட்டியாகவே வருடா வருடம் நடத்தி வருகிறார்கள்
இப்போதெல்லாம் கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள்ளேயே கணவன், மனைவிக்கு இடையே ஒரு வெறுமை வந்துவிடுகிறது. போதாக்குறைக்கு இந்த செல்போன் வந்தாலும் வந்தது, எல்லா உறவுகளையுமே அறுத்தெரிந்து இடைவெளியை அதிகமாக்கி வருகிறது.
நூதன போட்டி
தம்பதிக்குள் இடைவெளியை குறைக்கவும், அவர்களிடையே அன்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதாவது கணவன், மனைவியை சுமந்து செல்லும் நூதன போட்டி அது. இதில் ஏராளமான தம்பதிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன், தம்பதிகளின் எடைகள் எவ்வளவு என்று குறித்து வைத்து கொள்ளப்படும்.
சுமக்கும் போட்டி
பின்னர் கணவன்கள் தங்கள் மனைவிகளை முதுகில் சுமந்து கொண்டு ஓட வேண்டும். அப்படி ஓடும் சாலைகள் சீர்செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வழியெல்லாம் புல்வெளி இருக்கும்... தண்ணீர் நிறைந்த சேறுகள் இருக்கும்... நிறைய தடுப்புகளை ஆங்காங்கே வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் மலைகளை கூட கடந்து செல்ல வேண்டியது வரும். ஆனாலும் தம்பதிகள் இதுக்கெல்லாம் அசர மாட்டார்கள்.
பீர் பீப்பாய் பரிசு
போட்டி கஷ்டமாக இருந்தாலும் சுமந்து செல்வது மனைவியை ஆயிற்றே? தூக்கி கொண்டு ஓடும்வழியெல்லாம் பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். சில நேரங்களில் அந்த தம்பதிகளின் குழந்தைகளும் கைதட்டி, உற்சாகம் எழுப்ப எழுப்ப... இன்னும் வேகமாக கணவன்மார்கள் மனைவியை சுமந்து ஓடுவார்கள். மனைவியை சுமப்பது ஒரு சுகம் என்றால் வெற்றி பெற்ற கணவன்மார்களுக்கு கடைசியாக வழங்கப்படும் பீர் இன்னொரு சுகம்!! கூடவே பிரம்மாண்ட பீர் பீப்பாய் பரிசாகவும் வழங்கப்படும்.
சாம்பியன் போட்டி
கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடந்தது. 834 அடி தூரத்திற்கு மனைவியை தூக்கி சுமந்து வரவேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது. 834 அடி தூரம் சுமந்து முதலில் வரும் கணவரே வெற்றியாளர். அதன்படி போட்டி துவங்கியது.மொத்தம் அதில் 30 ஜோடி கணவன்-மனைவி பங்கேற்றனர். ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
குஷியான தம்பதி
வெற்றிபெற்ற கணவனுக்கு "பீர்" பரிசாக வழங்கப்பட்டது. மனைவி ஜெசிவா என்ன எடையோ, அதுக்கு நிகரான பீர் வழங்கப்பட்டது. அதுமட்டும் அல்ல, ஜெசிவா எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த தம்பதிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே கலந்துகொண்டு பரிசை பெற்ற நிலையில் இது மற்றொன்று. குஷியில் உள்ளார்கள் இந்த தம்பதி. அதே குஷியோடு, பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் பங்கேற்க போகிறார்களாம்!