எம்.எச்.370 மர்மம்... வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினாரா விமானி... புதிய கோணத்தில் விசாரணை
கோலாலம்பூர்: மாயமாகிப் போன எம்எச் 370 விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனால், விமானத்தை வேண்டும் என்றே விமானி மோதி விபத்துக்குள்ளாக்கினாரா என்ற கோணத்தில் விசாரிக்க தேடுதல் படையினர் தீர்மானித்துள்ளனராம்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் கண்டுபிடிக்க இயலவில்லை.
விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானதாகவும், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
தேடும் பணி...
இந்நிலையில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணி கிட்டத்தட்ட முடிவுக்கு வரப் போகிறது. ஆனால், இதுவரை உருப்படியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில், இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
10 வாரத்தில்...
அடுத்த 10 வாரத்தில் இப்பணிகள் முடிவடையும் என்று சீன செய்தி நிறுவனம் ஸின்குவா தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதில் 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளுக்கு தேடுதல் வேட்டை முடிந்துள்ளது.
ஆட்டோ பைலைட்டில்...
விமானம் மாயமான சமயத்தில் இந்தப் பகுதிக்கு மேல்தான் ஆட்டோ பைலைட்டில் பறந்துள்ளதாக கருதப்படுகிறது. எரிபொருள் தீர்ந்த நிலையி்ல இப்பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற கணிப்பில் இங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சந்தேகம்...
இருப்பினும் இங்கு விமான பாகங்கள் எதுவும் கிடைக்காவிட்டால், விமானிதான் விமானத்தை வேண்டும் என்றே எங்கோ கொண்டு போய் மோதியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்திற்கு வர வேண்டியிருக்கும் என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இப்போதைக்கு இல்லை...
இதுகுறித்து ஆஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தலைமை ஆணையர் மார்ட்டின் டோலன் கூறுகையில், ‘இப்போது அந்த முடிவுக்கு நாங்கள் வரவில்லை. இருப்பினும் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அந்த முடிவுக்குத் தான் நாங்கள் வர வேண்டியிருக்கும்' என்றார்.
விமானத்தின் இறக்கை...
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு ரீயூனியன் தீவில் மாயமான விமானத்தின் இறக்கைப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் விமானம் தொடர்பான எந்த பகுதியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் தேடுதல் வேட்டை...
தற்போது சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீன அரசுகள் இணைந்து மாபெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.