பயணிகள் முன்பு சிப்பந்தி பெண்கள் குழாயடி சண்டை: விமானம் அவசர தரையிறக்கம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் சிப்பந்தி பெண்கள் இருவர் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் மின்னபொலிஸ் நகருக்கு கிளம்பியது. விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் சிப்பந்தி பெண்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது.
இரண்டு பெண்களும் வேலை தொடர்பான பிரச்சனை காரணமாக பயணிகள் முன்பு சண்டை போட்டனர்.
அடி, உதை
இரண்டு பெண் ஊழியர்களும் ஒருவரையொருவர் கையால் ஓங்கிக் குத்தி அடித்தனர். இதை பார்த்த மற்றொரு பெண் ஊழியர் அவர்களை விலக்கிவிட வந்தார். பாவம் அவருக்கும் குத்து விழுந்தது.
அவசர தரையிறக்கம்
சிப்பந்தி பெண்கள் அடிதடி சண்டை போடுவதை பார்த்த விமானி விமானத்தை சால்ட் லேக் சிட்டியில் அவசரமாக தரையிறக்கினார். சால்ட் லேக் சிட்டியில் விமானம் 80 நிமிடங்கள் நின்றது. அதன் பிறகு மின்னபொலிஸ் நகருக்கு கிளம்பிச் சென்றது.
மன்னிப்பு
பயணிகள் முன்பு அநாகரீகமாக சண்டையிட்ட சிப்பந்தி பெண்கள் சார்பில் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பயணிகள்
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மின்னபொலிஸ் நகருக்கு சென்ற விமானத்தில் இருந்த பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஏர்லைன்ஸில் வழக்கமாக பயணம் செய்வோருக்கு கூடுதல் மைல் பயணம் செய்யும் சலுகையும், மற்ற பயணிகளுக்கு டிராவல் வவுச்சர்களும் அளித்துள்ளது.