டிமென்ஷியாவை தடுத்து நிறுத்தி ஆய்வாளர்கள் சாதனை.. அல்சைமர் நோய்க்கும் விரைவில் தீர்வு!
வாஷிங்டன்: டிமென்ஷியா குறித்த ஆய்வில் புதிய மைல்கல்லாக ஒரு நிகழ்வை ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். எலியின் மூளை அமைப்பில் புதிய மருந்து மூலம் டிமென்ஷியா வராமல் தடுத்து நிறுத்தி சாதனை படைத்துள்ளனர் இந்த ஆய்வுக் குழுவினர்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவே இதைச் செய்துள்ளது. மூளையின் நோய்த் தொற்றுச் செல்கள், மூளையின் முக்கியப் பகுதியை தாக்குவதே டிமென்ஷியாவுக்கான முக்கியக் காரணம் என்று இந்த ஆய்வுக் குழு கூறுகிறது.
இந்த நிலையில் இந்த பாதிப்பை எலியின் மூளையில் தடுத்து நிறுத்தி இந்த சாதனையை செய்துள்ளனர் அமெரிக்கக் குழுவினர். இதன் மூலம் டிமென்ஷியாவுக்கான தடுப்பு மருந்தை எதிர்காலத்தில் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
டிமென்ஷியா உருவாக முக்கியக் காரணம் மைக்ரோக்ளியா என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அதாவது நோய்த் தொற்றால் மூளையில் ஏற்படும் பாதிப்பாகும் இது. மூளையில் உள்ள முக்கிய அமினோ ஆசிடான அர்ஜினின் அதிகமாகும்போதுதான் டிமென்ஷியா வருகிறது. அது குறையும் போது டிமென்ஷியா பாதிப்பும் குறையும். இந்த அர்ஜினின் குறைப்பைத்தான் தற்போது ஆய்வுக் குழுவினர் நிகழ்த்திக் காட்டி, டிமென்ஷியாவைத் தடுத்து உள்ளனர்.
இதற்காக ஒரு வேதிப் பொருளை அவர்கள் பயன்படுத்தி, அர்ஜினின் அதிகரிப்புக்குக் காரணமாகும் என்சைம் உற்பத்தியை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக அர்ஜினின் உற்பத்தி தடைபட்டு டிமென்ஷியாவும் தடுக்கப்பட்டதாம்.
இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் மாத்யூ கான் கூறுகையில், அமினோ ஆசிட் உற்பத்தியை தடுத்து நிறுத்தில் டிமென்ஷியாவைத் தடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இப்போதைய சோதனை முடிவுகள் அல்சைமர், டிமென்ஷியா ஆகிய நோய்த் தடுப்பு ஆய்வுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்றார்.