டென்மார்க்கிற்கும் பரவியது ஜிக்கா வைரஸ்
கோப்பென்ஹாகென்: குழந்தைகளை கருவிலேயே வளர்சிதைக் குறைபாட்டுக்கு உள்ளாக்கும் வைரஸான "ஜிக்கா" தற்போது டென்மார்க் நாட்டிற்கும் பரவியுள்ளதால் கர்ப்பிணிகள் பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் ஜிக்கா என்ற வைரஸ் நோய் பரவி வருகிறது. தாயின் கருவில் வளரும் குழந்தைககளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது.
இதனால் ஜிக்கா வைரஸ் நோய் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.
ஏடிஸ் காரணமா?:
இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
உடலுறவும் காரணமாம்:
ஆனால் உடலுறவு மூலமாகவும் இந்த நோய் பரவுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை கடந்து ஐரோப்பிய கண்டத்துக்கும் ஜிக்கா நோய் இன்று பரவியுள்ளது.
நோயின் தாக்கம் தீவிரம்:
இங்குள்ள ஆர்ஹஸ் நகரை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வந்தார். அவரை பரிசோதித்ததில் ஜிக்கா நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என டென்மார்க் நாட்டின் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளிட்டுள்ளது.
தடுமாறும் பிரேசில்:
இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஜிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.