ராஜநாகம் கடித்தும் தொடர்ந்து பாடிய பாடகி பலி: இளகிய மனமுள்ளவர்கள் வீடியோவை பார்க்காதீங்க!
ஜகார்தா: இந்தோனேசியாவில் பாடகி ஒருவர் ராஜ நாகத்தை வைத்துக் கொண்டு மேடையில் பாடினார். அப்போது பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக பலியானார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள காராவங் பகுதியை சேர்ந்தவர் இர்மா புலே. அவர் பாம்புகளை வைத்துக் கொண்டு மேடையில் பாடுவதை வழக்கமாக கொண்டவர். அப்பகுதியில் பல பாடகர்கள், பாடகிகள் பாம்புகளை வைத்துக் கொண்டு பாடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இர்மா ராஜ நாகத்தை வைத்துக் கொண்டு மேடையில் பாடினார். இரண்டாவது பாடலை பாடுகையில் அவர் பாம்பின் வாலை மிதித்துவிட்டார். உடனே அந்த பாம்பு அவரின் தொடையில் கடித்துவிட்டது.
பாம்புக்கடிக்கான மருந்து அளிக்கப்பட்டும் அதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. பாம்பின் விஷத்தை எடுத்திருப்பார்கள் என்று நினைத்து அவர் கடிவாங்கிய பிறகும் 45 நிமிடங்கள் பாடினார். அப்போது அவர் திடீர் என வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.