மலாலாவுக்கு நோபலுக்கு பதில் 'ஆஸ்கர்' கொடுக்கணும்: திட்டும் பாகிஸ்தானியர்கள்
இஸ்லாமாபாத்: மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளபோதிலும் அவரது சொந்த நாடான பாகிஸ்தானில் உள்ள பலர் அவரை வெறுக்கிறார்கள்.
பெண் கல்விக்காக குரல் கொடுத்து தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு மறுஜென்மம் எடுத்த பாகிஸ்தானிய சிறுமியான மலாலா யூசப்சாய்க்கு 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் பலரும் அவரை வெறுக்கிறார்கள். மலாலா மேற்கத்திய நாடுகளின் ஏஜெண்டாகி நாட்டை இழிவுபடுத்திவிட்டதாக பாகிஸ்தான் மக்கள் பலர் கருதுகிறார்கள்.
மலாலா பற்றி பாகிஸ்தானியரான அத்னான் கரிம் ராணா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மலாலாவுக்கு நோபல் பரிசுக்கு பதில் ஆஸ்கர் விருது வழங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்னான் போன்று பலரும் மலாலாவை திட்டி ட்வீட் போடுகிறார்கள். மேலும் மலாலா வெறுப்பாளர்கள் என்று ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
பெஷாவரில் மருந்து கடை வைத்துள்ள இன்குலாப் கான்(45) கூறுகையில்,
மலாலா மூலம் அவர்கள் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாத்தின் பெயரை கெடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்த முஸ்லீமை தேடினர். அப்போது தானே அந்த நபரை எங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்றார்.
பாகிஸ்தானில் உள்ள கடை உரிமையாளர்கள் மலாலாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ஐ ஆம் மலாலாவை விற்க மறுக்கிறார்கள்.