ஜெர்மனியில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்! மாட்டிறைச்சி கொந்தளிப்பு பற்றி வாய் திறக்கவில்லை
இந்தியா முழுக்க அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மத்தியில் மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெர்லின்: வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார். ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மோடி அந்நாட்டு சான்ஸலர் (Chancellor of Germany) ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். விருந்தினர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் இருவரும் நடந்து சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, தலைநகர் பெர்லினில் அரசு மரியாதையுடன் மோடியை, மெர்கெல் வரவேற்றார். பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைத் தொடங்கியது.
அப்போது, இந்தியா-ஜெர்மனி இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற கட்டமைப்பு, ரயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதனையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், " இந்தியா - ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும். திறன்மேம்பாட்டில் ஜெர்மனி சிறந்து விளங்குகிறது.
அதனால் இளைஞர்கள் பெரும் பயனடைகின்றனர். பயங்கரவாதத்தை எதிர்க்க ஏஞ்சலா மெர்கல் போன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அவசியம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது " என்று தெரிவித்தனர்.