தேவ்யானி விவகாரத்தில் இந்தியா காட்டிய வேகம்.. 'ஷாக்' ஆன அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியா காட்டிய கடும் எதிர்ப்பும், அதிரடி நடவடிக்கைகளும் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டனவாம்.
இந்திய அரசுத் தரப்பிலிருந்து இப்படி ஒரு வேகமான எதிர்ப்பை இதுவரை அமெரிக்கா சந்தித்ததில்லை என்பதால் இந்த நடவடிக்கைகள் அவர்களை அதிர வைத்து விட்டதாம்.
இந்தியா காட்டிய வேகம், கோபத்தைத் தொடர்ந்துதான் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யும் அளவுக்கு இறங்கி வந்துள்ளதாம் அமெரிக்கா.
மூன்று துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
இந்த வழக்கில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நீதித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகள் சரியா, அவர்கள் பக்கம் ஏதாவது தவறு இருக்கிறதா என்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்படுகிறது.
தவறாக கையாண்டது உண்மைதான்
அதேசமயம், இந்த வழக்கை தவறாக கையாண்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத்துறையும், இந்த விவகாரத்தை கையாண்ட விதம் சரியில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நேரம் பார்த்து இது தேவையா...?
ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான பங்குதாரராக அமெரிக்க பாதுகாப்புத்துறை கருதுகிறது. இந்தியாவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அது செய்து வருகிறது. இந்த நிலையில் தேவ்யானி விவகாரத்தால் இந்தியா கோபமடைந்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை விரும்பவில்லையாம். இதனால் ஒப்பந்தங்கள் பாதிக்குமோ என்று அது அஞ்சுகிறதாம்.
நம்பவே முடியவி்ல்லை
அதேசமயம், இந்திய அரசு இப்படி கோபமாக செயல்படும், அதிரடியாக நடவடிக்கைளை எடுக்கும் என்று அமெரிக்காவில் யாருமே எதிர்பார்க்கவில்லையாம். இது அவர்களுக்கு அதிர்ச்சிதானாம். வழக்கமாக அமெரிக்கா எது செய்தாலும் இந்திய அரசுத் தரப்பு வாயை மூடிக் கொண்டுதான் இருக்கும். அப்படியே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட மெதுவாகத்தான் அதைச் செய்யும். ஆனால் இந்த முறை இப்படி அதி வேகமாக அது செயல்பட்டது அமெரிக்கா எதிர்பாராத ஒன்று என்று அங்கு பேசிக் கொள்கிறார்கள்.