உள்ளூர் சட்டப்படியே எங்களது தூதரக ஊழியர்களுக்கு சம்பளம் தருகிறோம் - அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அந்தந்த நாட்டு சட்டத் திட்டத்தின்படிதான் ஊதியம் வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், நியூயார்க்கில், இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மோசமான முறையில், கைது செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியா அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தது இந்தியா. அதன்படி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரத்தையும், ஊழியர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு தற்போது பதிலளித்துள்ளது அமெரிக்கா. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பொதுவாக, உலக நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள், அந்த நாட்டு சட்ட திட்டங்களின்படிதான் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் நாட்டில் உள்ள பிற துணைத் தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, அதாவது சமையலர்கள், டிரைவர்களுக்கு மாதம் ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை சம்பளமாக தரப்படுகிறதாம். இது அமெரிக்க டாலரில் 200 முதல் 250 டாலராகும்.
ஆனால் நியூயார்க்கில் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 9.47 டாலரை நிர்ணயித்துள்ளது அமெரிக்க அரசு. இந்த ஊதியத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவில் உள்ள தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மகா மட்டகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.