தேவ்யானி கோப்ரகடே கைது நடவடிக்கை சரியே: அமெரிக்கா அறிக்கை
வாஷிங்டன்: தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்காவுக்கான முன்னாள் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடேவுக்கு கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தூதரக பாதுகாப்பு கிடையாது என அமெரிக்கா நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றிய தேவ்யானி விசா மோசடி வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு, ஆடை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான சம்பளம் வழங்கினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது பற்றி ஜனவரி 29-ஆம் தேதியிடப்பட்ட அறிக்கை, வெள்ளிக்கிழமையன்று நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலம், 2013 டிசம்பர் 12-ஆம் தேதியன்று தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்பதும், இந்திய துணைத் தூதராக இருந்த தேவ்யானிக்கு தூதரக அதிகாரிகளுக்கான பூரண பாதுகாப்பு இல்லை என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தேவ்யானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை வாபஸ் பெறவும் மாட்டோம், மன்னிப்பு கோரவும் மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.