டாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்.. இந்தியப் பெண் உட்பட 20 பேர் பலி !
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உட்பட 20 வெளிநாட்டினர் பலியாகியுள்ளனர்.
டாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கதேச ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
பின்னர் உள்ள நுழைந்த கமண்டோ படையினர் ஹோட்டலில் பிணைக் கைதிகளாக சிக்கியவர்களை மீட்க முயன்ற போது, இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில், ஹோட்டலில் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஒரு தீவிரவாதியை உயிரோடு பிடித்தனர்.
தீவிரவாதிகள் வசம் பிணைக் கைதிகளாக சிக்கியிருந்த இலங்கை, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 13 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். எனினும் முன்னதாக தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 20 வெளிநாட்டினர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்த 20 வெளிநாட்டவர்களில், இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடங்குவார். தாருஷி என்கிற அந்த இளம் பெண் கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவி. தனது விடுமுறையை கொண்டாடுவதற்காக ஹோலி ஆர்டிசன் பேக்கரிக்கு சென்றுள்ளார்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் தாருஷி படுகொலை செய்யப்பட்டார். இதை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
டாக்காவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.டாக்கா தாக்குதலால் ஏற்பட்ட வேதனை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என கூறியுள்ள மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாதிகளின் சதிச் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததாக, மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.