கடைசி நேரத்தில் ஏன் "ரூட்"டை மாற்றினார் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி??
மாஸ்கோ: மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் புரட்சிப் படையினரின் ஆதிக்கம் உள்ள பகுதி வழியாக விமானத்தைத் திருப்பிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
தான் அசவுகரியமாக உணர்வதாகவும் விமானி கூறியதும் தெரிய வந்துள்ளது. விமானம் வழக்கமான பாதையில் போகாமல் புரட்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியின் வான் வெளியில் திசை திரும்பியதால் உளவு பார்க்கும் விமானமாக இருக்கும் என்று கருதி புரட்சிப் படையினர் மலேசிய விமானத்தை சுட்டு வீ்ழ்த்தி விட்டனர்.
விமானி திசை திரும்பாமல் வேறு பாதையில் போயிருந்தால் ஒரு வேளை இந்த விபரீதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் உக்ரைனின் நிலைமை குறித்து விமானி சரியாக அறிந்து கொள்ளாமல் போனதால்தான் புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதியை அவர் பயன்படுத்தி மாட்டிக் கொண்டு விட்டார்.
டோரஸிலிருந்து தாக்குதல்
இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவில் உள்ள ராயல் யுனைட்டெட் சர்வீஸஸ் கழகத்தின் ஆய்வுப் பேராசிரியர் டாக்டர் இகோர் சுட்யகின் கூறுகையில், அனேகமாக புரட்சிப் படையினரின் வசம் உள்ள டோரஸ் மாவட்டத்திலிருந்துதான் ஏவுகணைத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும். அரசுப் படையின் உளவு விமானம் என்று புரட்சிப் படையினர் கருதியிருக்கலாம்.
விமானிக்கு ஏற்பட்ட திடீர் அசவுகரியம்
கடைசி நேரத்தில் விமானி தான் அவுசகரியமாக உணர்வதாக ரேடியோ தகவலை அனுப்பியுள்ளார். பின்னர்தான் அவர் விமானப் பாதையை மாற்றியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட அசவுகரியம் என்ன என்பது தெரியவில்லை.
மலேசியன் ஏர்லைன்ஸ் மாற்றச் சொல்லவில்லை
விமானத்தின் பாதையை தாங்கள் மாற்றச் சொல்லவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே விமானியாகவே பாதையை மாற்றியுள்ளார் என்றார் அவர்.
எக்கோ பிரச்சினையா...
இதற்கிடையே, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில், பல கிலோமீ்ட்டர் தொலைவில் உக்ரைன் நாட்டு ராணுவ விமானம் ஐஎல் 76 பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரேடாரில் அதுவும், மலேசிய விமானமும் ஒரே மாதிரியான எக்கோ அதாவது சமிக்ஞ்சையைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் முன்னால் வந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவ விமானம் என்று நினைத்து புரட்சிப் படையினர் தாக்கியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
ராக்கெட் மாறிப் பாய்ந்தது
உக்ரைன் விமானத்தைத் தாக்குவதற்காக அவர்கள் அனுப்பிய பக் ஏவுகணைகள் மலேசிய விமானத்தைத் தாக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
அரசுடன் போர் நிறுத்தம் கிடையாது
இதற்கிடையே விமானம் விழுந்த இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் செல்வதற்கு வசதியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு புரட்சிப் படைக்கு ரஷ்யா விடுத்த வேண்டுகோளை அது நிராகரித்து விட்டது. அதேசமயம், விமான விபத்து நடந்த இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் செல்வதற்கு தாங்கள் அனுமதி அளிப்போம், தடை செய்ய மாட்டோம் என்று புரட்சிப் படையின் வசம் உள்ள கிழக்கு உக்ரைனின் பிரதமர் அலெக்சாண்டர் போராடாய் கூறியுள்ளார்.