திருட்டுப் புகாரில் சிக்கிய மாரடோனாவின் மாஜி காதலி கைது... மாரடோனா அடித்ததாக புகார்!
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனாவின் முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா, பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மாரடோனா துபாயில் அளித்த திருட்டு புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"நேற்று மாலை 7.20 மணியளவில் அர்ஜெண்டினா வந்தடைந்த ரோசியோ ஒலிவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
53 வயதான மாரடோனாவின் 22 வயது முன்னாள் காதலிதான் கைது செய்யப்பட்டுள்ள ஒலிவா. தன்னுடைய துபாய் வீட்டில் இருந்து வாட்சுகள், வைர காதணி ஆகியவற்றை ரோசியோ திருடி விட்டதாக மாரடோனா புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் துபாய் அரசு அவருக்கு பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் ரோசியோ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், தன் மீதான புகாரினை மறுத்துள்ள ரோசியோ, மாரடோனாதான் தன்னை அடித்ததாகவும், அதனை மறைக்கவே இந்தப் பொய் புகாரினை தெரிவித்துள்ளதாகவும் பதில் புகார் அளித்துள்ளார்.