மரண தண்டனைக்கு முன்பு பர்கர், சாலட், ஜூஸ், ஐஸ்க்ரிம், இன்னும் பல கேட்ட பெண் கைதி
நியூயார்க்: மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பெண் கைதி ஒருவர் கடைசியாக சாப்பிட விரும்பிய உணவுப் பொருட்களின் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியலை அளித்துள்ளது அதிகாரிகளை வியக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரினீ ஜிஸன்டானர்(46). அவரது கணவர் டக்ளஸ் ஜிஸன்டானர். கெல்லி தனது காதலர் கிரிகரி ப்ரூஸ் ஓவனுடன் சேர்ந்து டக்ளஸை கொல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த 1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிகரி டக்ளஸை கடத்தி குத்திக் கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டக்ளஸை கொலை செய்ய கிரிகரியை தூண்டிவிட்ட கெல்லியை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிரிகரிக்கு ஆயுள் தண்டனையும், கெல்லிக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. கெல்லிக்கு வரும் 25ம் தேதி விச ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த 1945ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜார்ஜியாவில் ஒரு பெண்ணுக்கு கூட மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தான் கெல்லிக்கு வரும் 25ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இறக்கும் முன்பு கடைசியாக சாப்பிட வேண்டும் என கெல்லி ஒரு பெரிய பட்டியலையே அளித்துள்ளார். அவருக்கு பிரெட், மோர், 2 பர்கர், பெரிய பிரைஸ், செர்ரி வென்னிலா ஐஸ் க்ரீம், பாப்கார்ன், வேகவைத்த முட்டை, தக்காளி, மிளகு, வெங்காயம், காரட், சீஸுடன் கூடிய சாலட், எலுமிச்சம்பழ ஜூஸ் ஆகியவை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கேட்டுள்ள உணவில் 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.