இயக்குநர் பாக்யராஜுக்கு மஸ்கட் வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர்
இயக்குநர் பாக்யராஜுக்கு மஸ்கட் வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மஸ்கட் : மஸ்கட்டில் நடந்த நிகழ்ச்சியில், வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் இயக்குநர் பாக்யராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ், விஜய்டிவி புகழ் 'சூப்பர் சிங்கர்ஸ்' மற்றும் 'கிரிஸ்டில்ஸ் பேண்ட்' இசைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்த 'சங்கீத சாரல்' இசை நிகழ்ச்சி மஸ்கட், அல்பலாஜ் கிராண்ட் ஹாலில் அரங்கம் நிறைந்த வெற்றி நிகழ்ச்சியாக சென்ற 19ம் தேதி மாலை நடந்தேறியது.
மஸ்கட் 'வெற்றி விடியல்' தமிழ் அன்பர்களும், மஜான் ஈவென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய சூப்பர் சிங்கர்ஸின் 4 மணிநேர பிரமாண்ட இசை நிகழ்ச்சி பார்வையாளார்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டைரக்டர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கே.பாக்யராஜ் அவர்களுக்கு திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறந்த பணிக்காகவும், தமிழ் திரைப்படங்களில், நடிப்பில், திரைக்கதை அமைப்பில் அவர் செய்த புதுமைகளுக்காகவும், பல்துறை வித்தகர் என பலதுறைகளிலும் பயணித்து வெற்றிகண்ட அவரின் சாதனைகளுக்காகவும் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி 'வெற்றி விடியல்' தமிழ் அன்பர்கள் அமைப்பு கௌரவித்தது.
விஜய்டிவி புகழ் சூப்பர் சிங்கர்ஸ் திவாகர், ஸியாத், ஃபரீதா, சௌந்தர்யா ஆகியோரின் அற்புதமான பாடல்களும் மற்றும் ஹரியின் தலைமையிலான கிரிஸ்டல் பேண்ட்ஸ் குழுவினரின் ஆர்ப்பரித்த இசையும் அரங்கத்தில் நிரம்பியிருந்த பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது.
நிகழ்ச்சியை நடிகை செல்வி.ரம்யா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் விடியல் குழுமத்தின் தலைவர் கவிஞர். மு. பஷீர் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் ரகு முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முதன்மை அனுசரணையாளர் அசோக்குமார் அவர்கள் கே.பாக்யராஜுக்கு நினைவுப் பரிசும், விடியல் குழுமம் சார்பில் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பூர்ணிமா பாக்யராஜுக்கு கவிஞர். மு. பஷீர் நினைவுப் பரிசினை வழங்கினார். கே.பாக்யராஜ் முதன்மை அனுசரணையாளருக்கும், தலைவர் மு. பஷீர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரகுமுத்துக்குமார், விசாலாட்சி,ராஜசேகர், சுந்தர்ராஜன், சபரிக்குமார், வெங்கடேஷ்பாபு, டாக்டர். அனுபாமா, புஷ்கலா ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக தமிழ்க் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. மஸ்கட்டில் இது ஒரு மாபெரும் வெற்றி நிகழ்சியாக அமைந்தது என விழாவில் பங்கேற்ற அனைவரும் விடியல் தமிழ்க் குழுமத்தையும் அதன் நிர்வாகிகளையும் பாராட்டினர்.