கராச்சி ஏர்போர்ட்டில் பாலிவுட் இயக்குனரை மிரட்டி, செருப்பை காட்டிய பாகிஸ்தானியர்கள்
கராச்சி: கராச்சி விமான நிலையத்தில் பாலிவுட் இயக்குனர் கபீர் கானை சிலர் மிரட்டியுதன், செருப்பை காட்டி அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குனர் கபீர் கான் சயிப் அலி கான், கத்ரீனா கைஃப் ஆகியோரை வைத்து ஃபான்டம் என்ற படத்தை எடுத்து கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தார். 26/11 மும்பை தாக்குதல்களுக்கு பின் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட ஃபான்டம் படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல்களின் முக்கிய மூளையான ஹபீஸ் சயீத் தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து படத்திற்கு தடை வாங்கியது. இந்நிலையில் கபீர் கான் கராச்சியில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.
கராச்சி விமான நிலையத்தில் அவரை பார்த்த சில பாகிஸ்தானியர்கள் கோபம் அடைந்து அவரை சூழ்ந்து கொண்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக படமாக எடுக்கிறீர்கள், ஏன் ரா ஏஜெண்ட்கள் பற்றி எடுக்க வேண்டியது தானே என்று கூறி அவரை திட்டியதுடன் மிரட்டினார்கள்.
மேலும் ஒருவர் தனது காலணியை கழற்றி கபீரை மிரட்டியதுடன் அடிக்கப் பாய்ந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.