"சிறிய மனிதர்கள் பெரிய பதவிக்கு வந்தால் இப்படித்தான்.." இந்திய அரசு மீது இம்ரான் கான் கடும் கோபம்
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்று இந்திய அரசு அறிவித்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கோபமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குறைஷி ஆகியோர் சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு சந்திப்பு, நடத்துவதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா சார்பில் முதலில் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் காஷ்மீரில், காஷ்மீரை சேர்ந்த 3 போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது, மற்றும் தீவிரவாதி புர்கான் வானிக்கு தியாகி என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டது ஆகிய செயல்பாடுகளால் கோபம் அடைந்த இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்துள்ள இம்ரான்கான் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டில் "இந்தியாவின் ஆணவத்தனமான பதிலால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நான் விருப்பம் தெரிவித்து இருந்தேன். ஆனால் எனது வாழ்க்கை முழுவதுமே சிறிய மனிதர்கள் பெரிய அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளதை பார்த்து வந்துள்ளேன். அவர்களுக்கு பெரிய விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது" என கூறியுள்ளார்.
Disappointed at the arrogant & negative response by India to my call for resumption of the peace dialogue. However, all my life I have come across small men occupying big offices who do not have the vision to see the larger picture.
— Imran Khan (@ImranKhanPTI) September 22, 2018
பிரதமர் நரேந்திர மோடியைத்தான் இவ்வாறு மறைமுகமாக இம்ரான் கான் சாடியுள்ளதாக வெளியுறவு விவகாரங்களை கவனிப்போர் தெரிவிக்கிறார்கள்.