மலேரியா, யானைக்கால் நோய்களுக்கு மருந்து: இந்த 3 பேருக்கும் மருத்துவத்துக்கான நோபல் கிடைத்தது ஏன்?
ஸ்டாக்ஹோம்: ஒட்டுண்ணிகளுக்கு எதிரான நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்ததற்காக இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்குகிறது. சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தேர்ந்தெடுத்து, அவர்களைக் கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசினை வழங்கி வருகிறது. இந்தப் பரிசானது அந்த நாட்டை சேர்ந்த தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் வழங்கப்படுகிறது.
இதன்படி, 2015-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெறுவோர் விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
மூன்று பேர்...
இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பெருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய்களுக்கு எதிராக புதிய நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்ததற்காக அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் கேம்பல், ஜப்பானை சேர்ந்த சடோஷி ஒமுரா, சீனாவின் யூயூ டு ஆகியோர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய மருந்துகள்...
ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை பாதிக்கும் நோய்களுக்கு, தீர்வளிக்கும் மருந்துகளை கண்டுபிடித்துள்ளதன் மூலம், மூவரும் மனித இன நல்வாழ்விற்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதற்காக இவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
அவர்மெக்டின்...
விருதுக்கு தேர்வாகியுள்ள வில்லியம் கேம்பல் மற்றும் சடோஷி ஒமுரா ஆகியோர், 'அவர்மெக்டின்' என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தானது, ஒட்டுண்ணி சுற்றுப்புழுக்களால் ஏற்படும் சரும நோய், கண்பார்வை இழப்பு, யானைக்கால் வியாதி (பிலாரியாசிஸ்) போன்றவற்றை குணமாக்கும் வல்லமை பெற்றது.
மூன்றில் ஒரு பங்கு...
உருண்டைப்புழு ஒட்டுண்ணிகள் தாக்குதலால், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் சகாரா பகுதி, தெற்கு ஆசியா, அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஒட்டுண்ணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேரியாவுக்கு மருந்து...
இதேபோல், யூயூ டு 'ஆர்டிமிசினின்' என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்தானது மலேரியா நோயை கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் தன்மைக் கொண்டது.
மூளையைத் தாக்கும்...
உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் மலேரியா காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒற்றை செல் ஒட்டுண்ணிகளால் உருவாகும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது மூளையை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை...
இந்தாண்டு, ஸ்டாக்ஹோம் நகரில் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் விழாவில், மூவருக்கும் நோபல் விருதுடன், பரிசுத் தொகை 6.27 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையில் 50 சதவீதம் வில்லியம் காம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மீதம் 50 சதவீத தொகையை யூயூ டு பெற்றுக் கொள்கிறார்.