தீவிரவாத முகாம்களை மூடுங்கள்... அப்போது தான் அமைதி பேச்சு பலன் தரும்: பிரணாப்
இஸ்தான்புல்: பாகிஸ்தான் - இந்தியா பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு, பாகிஸ்தான் தன் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை மூடுவதே ஒரே வழி என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை சுற்றுப்பயணமாக துருக்கிச் சென்றுள்ள குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அங்கு நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது...
வாக்குறுதி....
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படவேண்டும். இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டும்.
அனுமதிக் கூடாது....
தீவிரவாதிகள் இந்தியாவின்மீது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு தனது மண்ணை பயன்படுத்துவதை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது.
தீவிர முயற்சி...
இந்த நிலையை உருவாக்காதது வரையில். மற்ற வளர்ச்சிகள்பற்றி நீங்கள் (பாகிஸ்தான்) எப்படி பேச முடியும்? எனவே, நவாஸ் ஷெரீப் என்ன சொன்னாரோ, அதை நிறைவேற்ற முயற்சி செய்வார் என நாங்கள் நம்புகிறோம்.இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.
போர் நிறுத்த உடன்படிக்கை....
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் மீது தீவிரவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையும் மீறப்பட்டு வருகிறது.
சிம்லா உடன்படிக்கை....
1972-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்வதற்கு தங்களது அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட இரு நாட்டு பிரதமர்களும் இப்போது ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறதுஎல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ள இந்த சிம்லா ஒப்பந்த அம்சங்கள் உதவும்.
தீவிரவாத செயல்கள்....
தன் மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என பாகிஸ்தான் 2004-ம் ஆண்டு வாக்குறுதி அளித்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான தீவிரவாத செயல்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்துதான் இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
ஐ.நா.பொதுச்சபை கூட்டம்....
எனவே நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், இந்தியா இதற்கு முக்கியத்துவம் அளித்தது.
ஒத்துழைப்பு....
இந்தியா அமைதியான, நட்பு ரீதியிலான, ஒத்துழைப்புடன் கூடிய உறவையே பாகிஸ்தானுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறது.2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
உரிய நடவடிக்கை....
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை, கட்டமைப்புகளை மூடுவதற்கு அந்த நாடு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், அர்த்தமுள்ள பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால் அதற்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எல்லை தாண்டிய தீவிரவாதம், வன்முறைகள் இல்லாத நிலை வரவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.