வரதட்சணைப் பிரச்சினை.. திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை டைவர்ஸ் செய்த துபாய் கணவர்
திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை டைவர்ஸ் செய்துள்ளார் துபாய் கணவர் ஒருவர்.
Recommended Video
துபாய்: வரதட்சணைப் பிரச்சினை காரணமாக துபாயில் திருமணமான பதினைந்து நிமிடங்களில் தனது மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் சமீபத்தில் நடைபெற்ற திருமணமொன்றில், மணமகன் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 18,02,753 கொடுத்து மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக, அப்பெண்ணின் தந்தைக்கு வாக்குறுதி அளித்தார். இதற்கு மணப்பெண்ணின் தந்தை சம்மதம் அளித்ததையடுத்து, அவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே, முன்பு அளித்த வாக்குறுதிப்படி பணத்தை தருமாறு மணமகளின் தந்தை மணமகனிடம் கேட்டு நச்சரித்துள்ளார். மணமகனும் பேசிய முழுத் தொகையையும் கொடுக்காமல், பாதித் தொகையை மட்டும் அளித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை பலர் முன்னிலையில் மணமகனிடம் சண்டை போட்டுள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மாமனார் தரக்குறைவாக பேசியதால் அவமானம் நேர்ந்துவிட்டதாகக் கருதிய மணமகன் உடனடியாக தலாக் கூறி, தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
திருமணமான 15 நிமிடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை முடிந்து போனது. இதனால் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் அரபு நாடுகளில் நடப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2012ம் ஆண்டு, திருமணத்திற்குப் பின் தனது மகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மாமனார் கூறியதால், ஆத்திரமடைந்த மணமகன் இதே போன்று திருமணமான சில நிமிடங்களிலேயே தனது மனைவியை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.