கேன்சருக்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து நோபலை வென்ற 3 விஞ்ஞானிகள்
ஸ்டாக்ஹோம்: வேதியியல் துறைக்கான இந்தாண்டிற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு கூட்டாக அளிக்கப்படுகிறது. உயிருள்ள ஒரு செல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்ததன் மூலம் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள் அளிக்க உதவியதற்காக இவர்களுக்கு இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடன் விஞ்ஞானி டோமஸ் லிண்டால், அமெரிக்க விஞ்ஞானி பால் மாட்ரிச், துருக்கி அமெரிக்க விஞ்ஞானி அஜிஸ் சாங்கர் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படும் என நோபல் பரிசு குழு நேற்று அறிவித்துள்ளது.
தாமஸ் லிண்டால்...
புற்று நோய் ஆராய்ச்சியாளரான தாமஸ் லிண்டால் (77) , முதல் முறையாக மரபணுக்களில் ஏற்படும் குறைபாடுகளைப் பழுதுபார்க்கும் நொதியங்ளை (என்சைம்கள்) கண்டுபிடித்தவர்.
பால் மோட்ரிச்...
அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் விரிவுரையாளராகவும், ஹார்வர்டு ஹியூக்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆய்வாளராகவும் பணியாற்றி வருபவர் பால் மோட்ரிச் (69).
அஜீஸ் சான்சார்...
துருக்கியில் பிறந்த அஜீஸ் சான்சார் (69) மூலக்கூறு உயிரி யல் விஞ்ஞானி ஆவார். மரபணு சீராக்கம், உயிரணுக்களின் சுழற்சி முறை ஆகியவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
செல்லின் செயல்பாடு...
உயிரோடு இருக்கிற ஒரு செல் எப்படி செயல்படுகிறது என்பதற்கான அடிப்படை அறிவை ஆராய்ந்துள்ள இந்த விஞ்ஞானிகள், காய்ச்சல், முதுமை போன்றவற்றுக்கு காரணமான மரபணு குறைபாடுகளை, உடலில் உள்ள செல்கள் தாமாகவே எப்படி சரி செய்கின்றன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
டியாக்சிரிபோநியூக்ளிக் அமிலம்...
பொதுவாக மரபணு செல்களில் (டி.என்.ஏ.) 'டியாக்சிரிபோநியூக்ளிக்' என்ற அமிலம் உள்ளது. இது உயிர்களின் உருவாக்கத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
அமில உருவாக்கம்...
மரபணு செல்கள் ஒன்று, இரண்டாகவும், இரண்டு நான்காகவும் பிரியும்போது இந்த அமிலம் ஒவ்வொரு செல்லிலும் இடம் பெற வேண்டும். அதற்கேற்ப மூலக்கூறு செல்கள் இந்த அமிலத்தை உருவாக்கும்.
புற்றுநோய்க்கு காரணம்...
அப்படி உருவாக்க தவறும்போது அமிலம் இல்லாத செல்கள் அழியும் அல்லது தவறான பரிமாணத்தை அடையும். இந்த குறைபாடு புற்றுநோய், முதுமை போன்றவற்றுக்கு ஒரு காரணம்.
செயல்பாடுகள் கண்டுபிடிப்பு...
அதே சமயம் மூலக்கூறுகளில் உள்ள புரதங்கள், அமிலத்தை துல்லியமாக கண்காணித்து, அவற்றில் குறைகள் தென்பட்டால் அவற்றை சரிசெய்து விடுகின்றன. இந்த செயல்பாடுகளைத் தான் நோபல் பரிசிற்கு தேர்வாகியுள்ள மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய சிகிச்சை...
இதன் மூலம் ஏராளமான பரம்பரை வியாதிகளுக்கான காரணங்களைக் கண்டறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல், புற்றுநோய்க்கான பின்னணியை அறிந்து, அவற்றிற்கு புதிய சிகிச்சைகள் அளிப்பதற்கும் இவர்களது ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான வாழ்க்கை...
இவர்களின் ஆய்வு மூலம் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான சிகிச்சை முறைகளின் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை...
நோபல் பரிசுத் தொகையான 9.5 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.6.2 கோடி) அந்த மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவிருக்கின்றனர்.
இலக்கியம், அமைதி...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும் (வெள்ளிக்கிழமை), பொருளாதார நோபல் பரிசு 12-ந் தேதி திங்கட்கிழமையும் அறிவிக்கப்படுகின்றன.