ஊழியர்களின் அஜாக்கிரதையால் தவறான மூளையில் கட்டியைத் தேடிய டாக்டர்... 4 பேர் சஸ்பெண்ட்
ஊழியர்களின் அஜாக்கிரதையால் தவறான நோயாளிக்கு மூளையில் ஆபரேசன் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைரோபி: கென்யாவில் தவறுதலாக நோயாளியை மாற்றி மூளையில் ஆபரேசன் செய்த டாக்டர் உட்பட மருத்துவ ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர்கள் ஆளை மாற்றி வைத்தியம் பார்த்த காமெடிகளை சினிமாக்களில் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜத்திலேயே அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள கென்யட்டா நேஷனல் மருத்துவமனையில் மூளையில் கட்டி என சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.இதற்கென ஒரு தேதியும் குறிக்கப்பட்டது. ஆனால், அன்று அவருக்காக ஆபரேசன் நடைபெறவில்லை. இது தொடர்பாக அவரது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதையால், சம்பந்தப்பட்ட நோயாளிக்குப் பதில் வேறு ஒருவருக்கு அன்று ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
நோயாளியின் மருத்துவ விபரங்கள் மாறியதால், வேறு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தலையில் ஆபரேசன் செய்த டாக்டர்கள், கட்டியைக் காணவில்லையே என தேடியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேர தேடுதலுக்குப் பின்னர் தான், தாங்கள் ஆபரேசன் செய்ததது தவறான நோயாளிக்கு என்பது அவர்களுக்கு உறைத்துள்ளது.
சத்தமில்லாமல் ஆபரேசனை முடித்துவிட்டு, இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் மறைத்து விட்டனர். அதிர்ஷ்டவசமாக தவறாக ஆபரேசன் செய்யப்பட்ட நோயாளியும் பிழைத்துக் கொண்டார்.
உண்மையில் ஆபரேசன் செய்யப்பட வேண்டிய நோயாளியின் உறவினர்களின் விசாரணையால் தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட டாக்டர் உட்பட நான்கு மருத்துவமனை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆனபோதும், மருத்துவமனையின் அஜாக்கிரதையால் நடந்த இந்த சம்பவத்தால் அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.