ஜெர்மன் விமானத்தை ஓட்டிய துணை விமானி தகுதியானவரா? டாக்டர் எழுப்பும் சந்தேகம்!
பாரிஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின், பாகங்களை மீட்கும் பணி 5 வது நாளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையில், புதிய திருப்பமாக துணை விமானிக்கு மன அழுத்த நோய் இருந்தது உறுதிதான் என்றும், அவர் விமானம் ஓட்ட தகுதியற்றவர் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாயினர். இந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்குகளில் 5 வது நாளாக தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒரு கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு கறுப்பு பெட்டியை மீட்பு படையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தேடி வருகின்றனர்.
உடல்கள் ஒப்படைப்பு
ஃபிரான்ஸ், விமான விபத்தில் பலியானர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களது உடல்களை ஒப்படைக்கும பணி நடைபெற்று வருகிறது. மரபணு சோதனை நடத்தப்பட்டு அவர்களது உடல் பாகங்களை சரி பார்த்து வருகின்றனர்.
நிவாரணத்தொகை
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஜெர்மன் விங்ஸ் விமான நிறுவனம் 50 ஆயிரம் யூரோக்களை இடைக்கால நிவாரணமாக வழங்கியுள்ளது. பிரான்ஸ் அரசு தங்களுக்கு போதுமான உதவிகளை செய்து வருவதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை விமானி வீட்டில் சோதனை
இதனிடையே சந்தேகத்திற்கு துணை விமானியின் வீட்டில் ஜெர்மன் போலீஸார் நடத்திய சோதனையில் 'முக்கிய ஆவணங்கள்' சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த ஆவணங்களில், துணை விமானி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மனஅழுத்த நோய்
இதனிடையே, விமானத்தை மோதச் செய்ததாக கூறப்படும் துணை விமானிக்கு மன அழுத்த நோய் இருந்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2009ஆம் ஆண்டு கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் தொடர்ந்து உளவியல் ஆலோசனை பெற்று வந்ததாக, ஃபிரான்ஸ் நாளிதழான ஃபில்டு டெய்லி கூறியுள்ளது.
சஸ்பெண்ட் ஆன விமானி
ஜெர்மன் விமான போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பயிற்சியின்போது அந்த துணை விமானி லுபிட்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், 2013ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஏர்பஸ் ஏ320 விமானத்தை இயக்குவதற்கு தகுதி பெற்றதாகவும் லூப்தான்சா தெரிவித்துள்ளது.
ஊடகங்களின் தகவல்கள்
அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல் குறித்து லுஃப்தான்ஸா எதையும் தெரிவிக்க முடியாது. அதற்கான போதிய விவரங்கள் இல்லாத நிலையில் இதனை எங்களால் உறுதி செய்ய முடியாது.
விமானிகளின் மனநிலை
விமானி லுபிட்ஸ் ஐ பணியில் அமர்த்தியபோது, மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பரிசோதனைகளையும் நிறுவனம் மேற்கொண்டது. மேலும், விமானிகளின் மனநிலை ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசிக்கிறோம்" என்றார்.