ச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்
ஒட்டாவா: இந்த மகப்பேறு நல மருத்துவர் செய்த காரியத்தை பார்த்தால், கண்டிப்பாக டாக்டர் சமூகத்திற்கே பெரும் தர்ம சங்கடம்தான். தாய்மை என்ற மகத்துவத்தை இவரை போன்ற மருத்துவர்கள் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
கனடா நாட்டின் மிக பிரபலமான மகப்பேறு மருத்துவர் பெர்னார்ட் நோர்மன் பார்வின். வயதோ 80 ஆகிறது. ரொம்ப வருஷமாகவே, யாரும் செய்ய தயங்கும் அசிங்கத்தை செய்து கொண்டே வந்துள்ளார் பெர்னார்ட்.
அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா.. அந்த கொடுமையான நிகழ்வுகள் பற்றி நீங்களே பாருங்கள். எந்த அளவுக்கு மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த டாக்டரின் செயல்பாடுகள் ஒரு அலாரம் மணி.
கூட்டம்
குழந்தையின்மை சிகிச்சைக்கு, கனடா நாடு முழுக்கவே ஒரு சில மருத்துவர்கள் ரொம்ப பிரபலம். அதில் ஒருவர்தான், பெர்னார்ட் நோர்மன் பார்வின். குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் தம்பதிகளுக்கு செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பேறு வழங்கும் வசதிகளும் இவரது மருத்துவமனையில் உள்ளன. எனவே, தம்பதிகள் கூட்டம் எப்போதும் அங்கே அலைமோதும்.
செயற்கை கருவூட்டல்
குழந்தை பேறு வேண்டும் என கேட்கும் பெண்ணின் வாழ்க்கைத் துணை, விந்தணுக்களை எடுத்து, அவற்றை கருவிகள் மூலம், கர்ப்பப்பைக்குள் செலுத்தி, குழந்தைகளை உருவாக்குவதுதான் செயற்கைக் கருவூட்டல் நடைமுறையாகும். சில நேரம், கணவரின் விந்தணுவில் போதிய வீரியம் இல்லாவிட்டால், அந்த தம்பதிகள் விரும்பும் வகையில் விந்தணு பெறப்பட்டு கருவூட்டல் நடைபெறும்.
தனது உயிரணு
பெர்னார்ட் நோர்மன் பார்வின் இதில்தான் பெரிய மோசடி செய்துள்ளார். இதுவரை அதிகபட்சம் 100 பெண்களுக்கு, அவர்கள் வாழ்க்கைத் துணையுடைய விந்தணு இல்லாமல் வேறு நபர்களின் விந்தணுவை பயன்படுத்தி கருத்தரிக்க வைத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், அதில் 11 பெண்களுக்கு தனது விந்தணுவை செலுத்தி கருத்தரிக்க வைத்துள்ளதுதான்.
உண்மையை மறைக்க முடியவில்லை
பெர்னார்ட் நோர்மன் பார்வின் செய்து வந்த இந்த அநாகரீக செயல் சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. பெர்னார்ட் நோர்மன் பார்வினிடம் சிகிச்சை பெற்று, குழந்தை பெற்ற பெண்மணி ஒருவர் தனது குடும்ப பின்னணி பற்றி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கும்போது, தனது குழந்தைக்கும் தனது குடும்பத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது தெரியவந்தது. மற்றொரு குழந்தைக்கு செலியாக் என்ற நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அது பரம்பரை வியாதியாகும். ஆனால் குழந்தையின் தந்தை, தாய் உட்பட குடும்பத்தில் யாருக்கும் அந்த நோய் கிடையாது. எனவே அந்த பெற்றோருக்கும், செயற்கை கருத்தரிப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப்படியாகத்தான் விசாரணை வளையத்தில், சிக்கிக்கொண்டார், பெர்னார்ட்.
கதறும் இளம் பெண்
இன்று நேற்றல்ல, பல வருடங்களுக்கு முன்பே, இப்படித்தான் மோசடி செய்துள்ளார், பெர்னார்ட். 25 வயதாகும், ரெபெக்கா டிக்சன் என்ற இளம் பெண்ணும், டாக்டரால் விந்தணு மாற்றம் செய்து பிறந்த குழந்தைதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. அந்த இளம் பெண் இதையறிந்து தற்போது கதறி துடிக்கிறார். என்னை தனது மகள் என்று வளர்த்த எனது தந்தைக்கு இதைக் கேட்டு பெரிய ஷாக். அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. இதையும் கேள்விப்பட்டு புழுவாக துடித்துக்கொண்டுள்ளார் என்று கண்ணீர் விடுகிறார் ரெபெக்கா. தன்னை கண்ணாடியில் பார்க்க கூட பிடிக்கவில்லை என்று கதறுகிறார் அந்த இளம் பெண்.
லைசென்ஸ் ரத்து
இதனிடையே, பெர்னார்ட் நோர்மன் பார்வினுக்கு எதிரான புகார், ஒன்டாரியோ ஒழுங்குமுறை கமிட்டி விசாரணைக்குச் சென்றது. அவர்கள் விசாரணை நடத்திவிட்டு, பெர்னார்டுக்கு 10,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்து, டாக்டர் லைசென்ஸ்சை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளனர். "உங்களை நம்பி வந்த நோயாளிகளை, ஏமாற்றியுள்ளீர்கள். துரோகம் செய்துள்ளீர்கள். பல தலைமுறைகளை குழப்பத்திற்கு கொண்டு சென்றுள்ளீர்கள். அதனால் நீங்கள் இனியும் டாக்டராக இருக்க முடியாது" என்று, விசாரணை குழு தெரிவித்துள்ளது.