வாலிபரின் கண்ணில் வளர்ந்த புழு... துளசி மூலம் அகற்றிய டாக்டர்கள்!
பெரு: மருத்துவ குணம் கொண்ட துளசியின் மூலம் பெரு நாட்டு இளைஞர் ஒருவரின் கண்ணில் வளர்ந்து வந்த ஒரு அங்குல நீளம் கொண்ட புழுவை வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள். இளைஞரின் கண்பார்வைக்கு எந்தவித பாதிப்பும் இன்றி இந்த சிகிச்சை நடைபெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரு நாட்டை சேர்ந்த 17 வயது இளைஞரின் இடது கண்ணின் இமைக்கு கீழே கடந்த ஒருமாதகாலமாக வீக்கம் இருந்து வந்தது. நாள்பட்ட அளவில் வீக்கம் அதிகமாவதும் அதனால் வலியும் அந்த இளைஞருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து, இளைஞரின் பெற்றோர் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பல சிகிச்சைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இளைஞருக்கு எம்.ஏர்.ஐ. சோதனை செய்யப்பட்டது.
உயிருடன் புழு
இளைஞரின் கண்ணின் கீழ்ப்பகுதியில் உயிரிடன் புழு இருப்பது தெரியவந்தது. அளவில் பெரியதாக இருந்த அந்த புழு இளைஞரின் கண்ணில் சுமார் ஒரு மாதமாக வளர்ந்து வந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த புழு நெளியும்போது வலியால் துடித்தார் அந்த இளைஞர்.
அறுவை சிகிச்சை ஆபத்து
கண்ணில் மெல்லிய திசுக்கள் இருக்கும் இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிறுவனின் மூளை வரை அல்லது கண் பார்வையைப் பாதிக்கும் என்பதால் புழுவை எப்படி அகற்றுவது என்று மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
கை கொடுத்த துளசி
நாளாக நாளாக புழுவின் அளவு மேலும் பெரிதாகி, சிறுவனின் கண் ஓரத்தில் புழுவின் தலை பாகம் வெளிப்பட்டது. இதனை அடுத்து இளைஞரின் நிலையை உணர்ந்த பெரு கண் மருத்துவர் கரோலினா மார்ஷெனெ, துளசி இலையின் மூலமே இதற்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று முடிவு செய்தார்.
புழு வெளியேற்றம்
பெருவின் தேசிய குழந்தைகள் மருத்துவமனையில் இளைஞருக்கு சிக்கலான இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, மருத்துவர்கள் நினைத்தது போலவே துளசியின் வாசம் இளைஞரின் கண்ணில் இருந்த புழுவை ஈர்த்தது. பின்னர் வழக்கமான முறைப்படி கண்ணில் இருந்த புழுவை முழுவதுமாக மருத்துவர்கள் வெளியேற்றினர்.
கொசு முட்டை புழு
இளைஞரின் கண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட புழு, கொசுவை உருவாக்கும் புழு என்றும், கொசு சிறுவனை கடிக்க வந்தபோது அதன் முட்டை கண்ணில் விழுந்து பின்னர் புழு வளர்ந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான புழு
இளைஞரின் கண்ணில் இருந்து உயிருடன் அகற்றப்பட்ட புழு 1 அங்குல நீளத்திலும் 1.5 செ.மீ அகலத்திலும் இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை பெரு தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.