தாய் இல்லாமல் கஷ்டப்பட்ட 9 வாத்துக்குஞ்சுகள்... வளர்ப்புத் தந்தையான நாய்!
தாயில்லாத வாத்துக்குஞ்சுகளுக்கு நாய் ஒன்று அடைக்கலம் கொடுத்துள்ளது.
லண்டன்: இங்கிலாந்தில் தாய் வாத்து இல்லாமல் தவித்து வந்த ஒன்பது வாத்துக் குஞ்சுக்களை, நாய் ஒன்று பாசத்துடன் அரவணைத்து வருவது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டை வாழ்ந்து வந்த வாத்து ஒன்று சமீபத்தில் ஒன்பது குஞ்சுகளைப் பொரித்தது. தாயுடன் சேர்ந்து அதன் குஞ்சுகளும் இரை தேடி ஒன்றாக சுற்றித் திரிந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென அந்த தாய் வாத்து காணாமல் போனது. இதனால், அதன் குஞ்சுகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகின.
இதனை அங்கிருந்த நாய் ஒன்று கவனித்தது. அந்த வாத்துக் குஞ்சுகளின் மீது இரக்கம் கொண்ட அந்த நாய், அவற்றை அரவணைத்து பாதுகாக்கத் தொடங்கியுள்ளது.
நாயின் அன்பினால் அது செல்லும் இடங்களுக்கெல்லாம் தனது தாயுடன் செல்வது போல் நினைத்து அந்த வாத்துக் குஞ்சுகளும் பின் தொடர்ந்து செல்கின்றன. சமயங்களில் நாயின் முதுகில் ஏறி சவாரி செய்வது, விளையாடுவது என வாத்துக் குஞ்சுகள் விளையாடுகின்றன. இதற்கு அந்த நாய் மறுப்பு ஏதும் தெரிவிப்பதில்லை. இது அந்தக் கோட்டைக்கு வருவோரை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
இதுதொடர்பாக ஸ்டான்ஸ்டட் கோட்டையின் இயக்குனர் ஜெராமி கோல்ட்ஸ்மித் கூறுகையில், “ஆரம்பத்தில் வாத்துக் குஞ்சுகளிடம் நாய் போகும்போது நாங்கள் பயந்தோம். நாயினால் வாத்துக் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அஞ்சினோம். ஆனால், தாய் வாத்து இல்லாததை அறிந்து, நாய் அந்தக் குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப் போல் அக்கறையாக பொறுமையாக அது குஞ்சுகளைக் கவனித்து வருகிறது' என்கிறார்.