விபத்தில் சிக்கிய எஜமானி.. உதவிக்காக 3 நாட்கள் போராடிய செல்ல நாய்.. கடைசியில் என்ன செய்தது பாருங்கள்
விபத்தில் சிக்கிய எஜமானிக்கு உரிய உதவி கிடைக்கச் செய்து தனது நன்றியுணர்ச்சியை நிரூபித்துள்ளது நாய் ஒன்று.
வெலிங்டன்: நியூசிலாந்தில் விபத்தில் சிக்கிய தன் எஜமானியை மூன்று நாட்கள் பாதுகாத்து, அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க உதவி தனது நன்றியுணர்ச்சியை நிரூபித்துள்ளது நாய் ஒன்று.
நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் பகுதியில் மாஸ்டர்டன் என்ற இடத்தில் வசித்து வருபவர் கெர்ரி ஜோர்டான் (63) என்ற பெண்மணி. இவர் தனக்கு பாதுகாப்பிற்காக பார்டர் கோலி வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். பேட் எனப் பெயரிட்டு, தனது வீட்டில் ஒருவராக, தனது மகன் போல அந்த நாயை அவர் கவனித்து வந்துள்ளார். இதனால் பேட்டுக்கும் கெர்ரி மீது அதீத பாசம்.
இந்நிலையில், கடந்த வாரம் கெர்ரி தனது நாயுடன் பால்மர்ஸ்டன் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பஹியாதுவா என்ற பகுதியில் எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. அதில், 45 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
படுகாயம்:
இந்த விபத்தில் கால், நெஞ்சு மற்றும் மார்பெலும்பு ஆகிய பகுதிகளில் கெர்ரிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவரால் காரை விட்டு வெளியேற இயலவில்லை. மூன்று நாட்கள் அவர் காருக்குள்ளேயே கிடந்துள்ளார்.
காவல்:
அதிர்ஷ்டவசமாக விபத்தில் காயம் ஏதும் ஏற்படாமல் தப்பித்த பேட், தனது எஜமானிக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என தவித்துள்ளது. ஆனால், தான் அங்கிருந்து சென்றால், மற்ற விலங்குகளால் கெர்ரியின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என அவர் அருகிலேயே மூன்று நாட்களும் அது பாதுகாவலனாக இருந்துள்ளது. அவரை சுற்றிச் சுற்றி வந்து ஊக்கமளித்து கொண்டே இருந்துள்ளது.
அதிர்ச்சி:
மூன்று நாட்களுக்குப் பிறகு அப்பகுதி வழியே இரண்டு பேர் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை நோக்கி குரைத்து, தன் எஜமானி விபத்தில் சிக்கியதை தெரிய வைத்துள்ளது பேட். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், காருக்குள் கெர்ரி சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிகிச்சை:
இது தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் கெர்ரி அங்கிருந்து மீட்கப்பட்டு வடக்கு பால்மர்ஸ்டன் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
நாய்க்கு பாராட்டு:
நன்றியுணர்ச்சிக்கு பேர் போனது நாய். அதனை இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது பேட். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இணையத்தில் ஹீரோவாகி விட்டது பேட்.