உங்களுக்கு கொரோனா இருக்கா.. மோப்பம் பிடிச்சே சொல்லும் சிலி நாட்டு நாய்கள்.. சூப்பர் நியூஸ்!
சான்டியாகோ: மக்களின் வியர்வையை மோப்பம் பிடித்து அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் விதமாக சிலி நாட்டில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
உலக நாடுகள் கொரோனா வைரஸை எப்படி தடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பல நாடுகள் கொரோனா வந்த பிறகு குணமடைய மருந்தையும், கொரோனா வருவதற்கு முன்னர் போடப்படும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என கண்டறிய நாள்தோறும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப கணிசமானவர்களுக்கு பிசிஆர் சோதனை மூலம் கண்டறிகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி - 10 வீதிகளில் நடமாட தடை
ரேபிட் டெஸ்ட்
இந்த சோதனை மூலம் முடிவுகள் வர மணிக்கணக்கில் ஆவதால் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி வந்தனர். இதில் இந்த கிட்களும் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அவை கைவிடப்பட்டன. இந்த நிலையில் சிலி நாட்டில் உள்ள மக்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களின் வியர்வை மூலம் கண்டறியும் வகையில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிகள்
வெடிபொருட்கள், போதை பொருட்கள் ஆகியவற்றை மோப்பம் பிடித்து கண்டறியும் மோப்ப நாய்கள் முன்னர் மலேரியா, கேன்சர், பார்கின்சன் உள்ளிட்ட நோய்கள் இருக்கின்றனவா என கண்டறிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. அது போல் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கண்டறிய 4 நாய்களுக்கு பயிற்சி அளிக்கிறது சிலி நாடு.
4 நாய்கள்
ஆரம்ப கட்ட முயற்சியான இதில் லேப்ரடார், கோல்டன் ரிட்ரீவர் ஆகிய இனங்களில் 4 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோல்டன் ரிட்ரீவர் எனப்படுவது ஒரு வேட்டை நாய், இது தண்ணீரில் பயணம் செய்ய வல்லது. இந்த 4 நாய்களுக்கும் பயோடிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. சிலியின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் இவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
போராட பயிற்சி
இந்த பயிற்சி பள்ளியின் இயக்குநர் துணைநிலை கலோனல் கிறிஸ்டியன் ஆசிவேடோ யானஸ் கூறுகையில் நாய்களுக்கு 3 மில்லியன் வாசனை நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இது மனிதர்களை காட்டிலும் 50 மடங்கிற்கு மேல் அதிகமாகும். எனவேதான் இவை கொரோனா வைரஸுக்கு எதிராக போராட பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சியை பெறும் நாய்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளிகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.
தனிமைப்படுத்துதல்
இவை அந்த இடங்களில் உள்ள மக்களின் வியர்வை நாற்றத்தை வைத்தே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும். அப்போது அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு பிசிஆர் சோதனை எடுப்பர். இதனால் சமூக பரவல் என்பது கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.