கத்தாரில் பலாத்கார புகார் அளித்த நெதர்லாந்து பெண்ணுக்கு ரூ. 54,000 அபராதம்
தோஹா: பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொண்டதாகக் கூறி அவருக்கு தோஹா நீதிமன்றம் ரூ. 54 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்தவர் லாரா(22). அவர் விடுமுறையை கழிக்க கத்தாருக்கு சென்றார். கடந்த மார்ச் மாதம் தோஹா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார். அங்கே அவர் அருந்திய மதுவில் மயக்க மருந்து கலந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் கண்விழித்தபோது லாரா சிரியாவை சேர்ந்த உமர் அப்துல்லா அல் ஹஸன் என்பவரின் வீட்டில் இருந்தார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்க போலீசாரோ கள்ளத்தனமான செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறி லாராவை கைது செய்தனர்.
இந்த வழக்கு தோஹா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கள்ளத்தனமாக செக்ஸ் வைத்துக் கொண்ட லாராவுக்கு ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் அந்த தொகையை செலுத்தியவுடன் நாடு கடத்தப்பட உள்ளார்.
மேலும் அப்துல்லாவுக்கு 100 கசையடி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர மது அருந்தியதற்காக அப்துல்லாவுக்கு மேலும் 40 கசையடி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அப்துல்லாவும் நாடு கடத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் தனது மகள் விடுதலையாகி நாடு திரும்ப உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் லாராவின் தாய்.