பாகிஸ்தான் குறித்து ஹெட்லி கூறியதில் கடுகளவு கூட உண்மை இல்லை.. முஷாரப்
இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தான் பற்றி தெரிவித்துள்ளதில் கடுகளவும் உண்மை இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக கூறி வந்த பொய்யை எல்லாம் அவர் அம்பலப்படுத்திவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில்,
எங்கள் விசாரணை மற்றும் எங்கள் உளவுத் துறையும் ஹெட்லி கூறுவது போன்றே தெரிவிக்கும் வரை அவர் கூறும் எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. யாரோ ஒரு சாட்சி கூறுவதை எல்லாம் நம்பிவிட முடியாது. அவரை எதை கூறுமாறு தெரிவிக்கிறார்களோ அதையே அவர் கூறி வருகிறார்.
மோடி பாகிஸ்தானுக்கு வந்து ஷரீபை சந்தித்தது போலியானது. அவர்கள் கைகுலுக்கி ஹேப்பி பர்த்டே கூறிக் கொண்டதை தவிர வேறு முக்கியமான விஷயம் பற்றி எதுவும் ஆலோசித்ததாக தெரியவில்லை என்றார்.