ஈழத் தமிழர் ஆதரவு வேறு- புலிகள் ஆதரவு வேறு: மலேசியா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஆயூப் கான்
கோலாலம்பூர்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது என்பதும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பதும் ஒன்று அல்ல என மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஆயூப்கான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் அயூப் கான் மொய்தீன் பிச்சை கூறியதாவது:
ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவதும் ஒன்று அல்ல. பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் காட்டலாம். ஆனால் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தருவதை ஏற்க முடியாது.
செயல்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி அளித்தது. நிதி திரட்டியது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பதிவிட்டவர்களும் உண்டு. அவர்களிடம் இருந்து புலிகள் இயக்க கொடிகள், புத்தகங்கள், போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் யார் தொடர்பு வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு ஆயூப் கான் கூறினார்..