அப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: காஷ்மீர் மக்களுக்கு உதவ யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி எல்லை தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிவிடும் என இம்ரான் கான் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலத்தை பிரித்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.
இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அரசு பிறப்பித்தது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய அரசின் செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக நாடுகளிடமும் பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. இந்தியாவுடனான வர்த்தக உறவையும் முறித்துக்கொண்டது.
இம்ரான்கான் மிரட்டல்
ஆனால் உலக நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி ஒதுங்கிக்கொண்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா பாகிஸ்தான் இடைய போர் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையிலேயே மிரட்டல் விடுத்து பேசினார்.
ஜம்முவை தவிர மற்ற இடங்கள்
இதற்கிடையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ஜம்முவை தவிர பிறபகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு மேலாக இயல்பு வாழ்க்கை ஜம்மு காஷ்மீரில் முடங்கி உள்ளது.
முஷாபர்நகரில் வாகன பேரணி
அங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஏராளமானோர் வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணி ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள முக்கிய நகரான முஷாபர்நகர் நோக்கி நடந்தது.
காஷ்மீரிகள் நிலை
இந்த போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "காஷ்மீரை சேர்ந்த தங்கள் சக காஷ்மீரிகளின் நிலையை பார்த்து வேதனை அடையும் காஷ்மீரிகளின் (ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்) உணர்வுகளை நான் புரிந்து கொண்டு உள்ளேன்.
இம்ரான்கான் எச்சரிக்கை
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காகவோ, போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம். அவ்வாறு எல்லை தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிவிடும்" என்று இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.