பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்… இந்தியாவை மிரட்டி பார்க்கும் பாக். ராணுவ தளபதி
பாகிஸ்தானின் பொறுமையை பலவீனமாக கருத வேண்டாம் என்று அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசியிருக்கிறார்.
இஸ்லாமாபாத்: பொறுமையாக செல்வதை பலவீனம் எனத் தவறாக கருதிவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெறும் ரஹீல் ஷெரிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராவல்பிண்டியில் நடந்த அதிகாரம் மாற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 16-வது புதிய ராணுவ தளபதியாக ஒமர் ஜாவத் பாஜ்வா பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஒய்வு பெறும் ராணுவ தளபதி ஷெரிப்புக்கு பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஹீல் ஷெரிப், நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படும் இந்தியாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் சமவெளியில் இந்தியா மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இந்தப் பிராந்தியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் பொறுமையை பலவீனமாக இந்தியா கருதினால் அந்நாட்டிற்கு அது ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஷெரிப் எச்சரித்தார்.
தமது பணிக்காலத்தில் நாட்டின் நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும்ää இருப்பினும் நாட்டின் பாதுகாப்பு நிலை இக்கட்டான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் சொன்னார். அதிகார மாற்றத்தின் போது தம்மிடம் இருந்த கட்டளைக் குச்சியினை புதிய தளபதியாக பதவியேற்ற பாஜ்வாவிடம் ஷெரிப் வழங்கினார்.
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் பாஜ்வா பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.