பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப்.. எதற்கு தெரியுமா?
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், தொலைபேசியில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. கோவா, மணிப்பூரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 21 தொகுதிகளை மட்டுமே வென்ற பாஜக, மற்ற கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல் கோவா மாநிலத்திலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் அஞ்சேல மெர்கல் இருவரது தேர்தல் வெற்றிக்கு தொலைபேசி உரையாடல் மூலம் வாழ்த்து கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.