நிலைமை சரியில்லையே.. சவுதி இளவரசருக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்
தெஹ்ரான்: ஈரானுடனான அதிகரித்துவரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளிக்கிழமை சவுதி மகுட/முடி இளவரசரும், துணை பிரதமரும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சருமான, முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இரு தலைவர்களும் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் ஈரானிய நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து விவாதித்ததாக சவுதி பத்திரிகை ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையால், கடந்த, வியாழக்கிழமை வளைகுடா பிராந்தியத்தில் ஆளில்லா அமெரிக்க ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி வெளியிட்ட ஒரு அறிக்கையில், மத்திய கிழக்கிலும் உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் சவுதி அரேபியாவின் முக்கிய பங்கு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ஈரானிய அரசின் பதற்றத்தை தூண்டும் நடவடிக்கைகள், காரணமாக ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் அவர்கள் விவாதித்தனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் வளைகுடாவில் கடந்த வாரம், ஹோர்மஸ் ஜலசந்திக்கு அருகே, இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தாக்கப்பட்டதையடுத்து, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம், இரண்டு சவுதி எண்ணெய் டேங்கர்கள் உட்பட நான்கு வணிகக் கப்பல்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல்களுக்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது, இதை ஈரான் மறுத்துள்ளது நினைவிருக்கலாம்.