அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிராக திரண்ட பெண்கள்... முழக்கத்துடன் பேரணி #MeToo
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த தினத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் கண்டன பேரணி நடத்தினர்.
நியூயார்க்: ட்ரம்ப் ஆட்சியின் ஓராண்டு சாதனை எதுவுமில்லை... பாலியல் துன்புறுத்தல் தீரவில்லை... இது எங்கள் குரல்... என்று முழக்கமிட்டு அமெரிக்க வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு தொப்பி அணிந்து கண்டன பேரணி நடத்தினர்.
அமெரிக்காவில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி, அந்நாட்டு அதிபராக பதவியேற்றார். அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்புக்கு எதிராக உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களைப் பற்றி ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள், பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன. இதுபோன்ற கருத்துகளால் அவர் பெண் வாக்காளர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
ட்ரம்புக்கு எதிர்ப்பு
கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.ட்ரம்பின் இந்த வெற்றியைக் கொண்டாடப் பெரும்பாலான அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. அவர் அதிபராகப் பதவியேற்ற நாளில் அதை எதிர்க்கும் விதமாக பெண்கள் பேரணி தலைநகர் வாஷிங்கடனில் நடைபெற்றது.
|
லட்சக்கணக்கான பெண்கள்
இதற்கு ஆதரவு தெரிவிக்கும்விதத்தில், சிஸ்டர் மார்ச்என்ற அமைப்பினர் உலகம் முழுவதும் 670 இடங்களில் அதே மாதிரியான பேரணிகளை ஒருங்கிணைத்திருந்தனர். பாரிஸ், பெர்லின், சிட்னி உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 40 லட்சம் பெண்கள் இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கிறது இந்த அமைப்பு.
பெண்கள் முழக்கம்
பெண்களின் உரிமைகளும் மனித உரிமைதான்,என் உடல் என் உரிமை போன்ற வாசகங்களுடன் இந்தப் பேரணி களில் பெண்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதத்திலும் மீடூ என்ற முழக்கத்துடன் பெண்கள் பேரணி நடத்தினர். பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் இருப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று உலகப் பெண்கள் இந்தப் பேரணி மூலம் எச்சரித்தனர்.
சிவப்பு தொப்பியுடன் கண்டனம்
அதிபராக ட்ரம்ப் பதவியேற்று நேற்று ஜனவரி 21ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி அமெரிக்காவில் இரண்டாம் ஆண்டு பெண்கள் பேரணி சனிக்கிழமையன்று நடந்தது. வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, பாஸ்டன் உட்பட, நாடு முழுவதும் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் இளம் சிவப்பு நிற தொப்பிகளை அணிந்து, அதிபர் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
|
வரலாற்று வெற்றி
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடாமல் பெண்கள் பேரணி செல்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.