நான் இனி தொழிலதிபர் இல்லை... ட்ரம்ப் அதிரடி
அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தனது சொந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து விலகி இனி அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) வெற்றி பெற்றார். எதிர்பாராத இந்த வெற்றியால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.
டொனால்ட் ட்ரம்ப்பை பொறுத்தவரை அரசியலில் தீவிரமாக ஈடுபடாதவர். ஆனால் ட்ரம்ப் திடீரென அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ட்ரம்புக்கு குடியரசுக் கட்சியில் ஆதரவு பெருகியதால் அவரே அதிகாரப்பூர்வ வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டார். தொழிலதிபரான ட்ரம்ப் நிச்சயம் தோல்வியை தழுவுவார் என்றே பெருவாரியான கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வந்தன. ஆனால் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இனி தனது சொந்த தொழில் நடவடிக்கைகளை கைவிட்டு, அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப், "நான் எனது சிறந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விடுபட போகிறேன். இனி எனது நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.