வெளியாக ஆரம்பித்தது அமெரிக்க தேர்தல் டிரெண்ட்.. ஹிலாரி-ட்ரம்ப் நடுவே கடும் போட்டி
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு கென்டகி மற்றும் இன்டியானா மாகாணங்களில் வாக்குப்பதிவு முதலாவதாக நிறைவடைந்தது. இதையடுத்து 5:30 மணியளவில் ஃபுளோரிடா, விர்ஜினியா, ஜார்ஜியா, சவுத் கலிபோர்னியா மற்றும் வெர்மோன்ட் பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
இதன்பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவர தொடங்கின. சிஎன்என், ஃபாக்ஸ் செய்தி சேனல்கள் ஹிலாரி கிளிண்டன் ஏறுமுகத்தில் இருப்பதாக கணித்துள்ளன. 538 பிரநிதிகளில் குறைந்தது 270 பிரநிதிகளை பெறும் கட்சி வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கென்டகி, இன்டியானா, மேற்கு விர்ஜினியா ஆகியவற்றில் வென்றதாகவும், வெர்மோன்ட்டில் ஹிலாரிக்கு வெற்றி முகம் கிடைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. புளோரிடா, பென்சில்வேனியா தொகுதிகளில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
அதேநேரம், பிற மாகாணங்களில் எக்சிட் போல் முடிவுகள் ஹிலாரிக்கு ஆதரவாக உள்ளன. காலை 6.45 மணி நிலவரப்படி, ஹிலாரி 68 தொகுதிகளிலும் டிரம்ப் 57 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக எக்சிட் போல்கள் கூறின. அடுத்தடுத்து போல் ரிசல்டுகள் வந்து கொண்டுள்ளன.