நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்.. டொனால்ட் டிரம்ப் ஆவேசம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு இருகட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். இதில் அமெரிக்காவை வழிநடத்துவதற்கான திட்டங்கள் குறித்து சூடான விவாதங்கள் அரங்கேறும்.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியுடனான இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் இருவரும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
விவாதத்தின் போது கொள்கைகள் தொடர்பான அம்சங்களைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுவதிலேயே பெரும்பகுதி நேரத்தை செலவழித்தனர். பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் மீது ஹிலாரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த டிரம்ப், அது, நடந்து முடிந்த பழைய கதை. நான் வெள்ளை மாளிகையில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன். அரசு அலுவல்களுக்காக தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்தி, அதன்வழியாக நாட்டின் முக்கிய ரகசியங்கள் கொண்ட சுமார் 30 ஆயிரம் முக்கிய கடிதங்களை கசியவிட்டு, நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி ஹிலாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்டதாக அவர் சாடினார். தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் டிரம்ப்.
இதற்கு பதில் அளித்த ஹிலாரி, இவ்வளவு ஆவேசம் கொண்ட நபரை இந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு நீங்கள் (வாக்காளர்கள்) அனுப்பாமல் இருப்பது நல்லது என்றார்.
சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. வரும் 19-ஆம் தேதியும் டிரம்ப் - ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.