கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் விசாரணை
சென்னை: கொலை வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை நீதிமன்றம் இன்றும் விசாரணை நடத்தியது. அப்போது, அரசு சாட்சிகள் அடையாளம் காட்டினர்
ஈபிடிபி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1986-ல் சென்னையில் தங்கியிருந்தார். அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர். இதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், டக்ளஸ் தேவானந்தா ஆட்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் திருநாவுகரசு என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதன் பின்னர் இந்த 10 பேரும் இலங்கைக்கு சென்று விட்டனர். இதில் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருக்கும்போது, சிறு தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மட்டும் அடையாளம் தெரிந்தது.
அவர் மீதான வழக்கை விசாரிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகிய டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தான் ஒரு அப்பாவி என்று டக்ளஸ் கூறினார்.
இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று டக்ளஸ் தேவானந்தாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அரசு தரப்பில் 5 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 3சாட்சிகள் டக்ளஸ் தேவானந்தாவை சுட்டிக் காட்டி இவர் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.