போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி... சவுதியில் தடையை மீறி காரோட்டிய 60 பெண்கள்
ரியாத்: சவுதியில் தடையை மீறி ரகசியமாக 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களே இந்த வீடியோவை யூடியூப்பிலும் தடையை குறித்து பேசி வருபவர்களுக்கும் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதி அரேபிய சாலைகளில் பெண்கள் கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை இயக்க அந்நாட்டு மதவாதிகள் தடை விதித்துள்ளனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தடையை மீறும் பெண்களுக்கு போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டனை தரப்படும் என அவர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் நேற்று அவர்களின் தடையை மீறி 60 பெண்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்ப்பப்பை பாதிப்பு...
கார் ஓட்டினால் கர்ப்பப்பை பாதிக்கும் என்ற மதவாதிகளின் கருத்து அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் உரிமமில்லை...
மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.
60 பெண்கள்....
எனவே, பெண்களுக்கெதிரான இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டு உரிமம்...
இவர்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ளனர்.
பெண்ணுரிமை....
போலீசாரின் கண்களிலும் மதவாதிகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு காரணங்களுக்காக....
காரோட்டிய பெண்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாதபடி, முகத்திற்கு முக்காடிட்டு மறைத்தும், கண்களுக்கு கருப்பு கண்ணாடி அணிந்தும் காட்சியளித்துள்ளனர். சிலர் மட்டுமே முகம் தெரியும் படியாக வெளிப்படையாக அமர்ந்துள்ளனர்.
எப்படி சாத்தியமானது...?
இப்பெண்கள் இரவு மற்றும் பகல் வேளைகளில் இவ்வாறு கார்களில் சாலைகளில் வலம் வருவது போன்ற வீடியோ அங்குள்ள மதவாதிகள் மற்றும் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.